இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டில் புதிய முறை: மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் பேட்டி




சென்னை: இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டு முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறியதாவது: இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு 2லட்சத்து 11 ஆயிரத்து 95 மாணவர்கள் விண்ணப்பம் பதிவாகி உள்ளது. இவர்களில் 1 லட்சத்து 69,079 ேபர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆக.1 முதல் வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.


அதனைத்தொடர்ந்து பொறியில் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். பொறியியல் படிப்பில் நடப்பாண்டு முதல், புதிய முறை அறிமுகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்த பின்னர் 7 நாட்கள் கல்லூரியில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்படும். இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத மாணவர்களின் இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்று கலந்தாய்வில் அந்த இடங்கள் காண்பிக்கப்படும். அவர்களுக்கு பின்னால் இருக்கும் மாணவர்களுக்கு அந்த இடம் வழங்கப்படும்.


அதேபோல், கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் இந்த இடம் தனக்கு தேவை எனவும், அடுத்த சுற்றில் கலந்துகொண்டு வேறு இடத்தை தேர்வு செய்ய விரும்புவதாக( Upborad Movement) தெரிவிக்கும் மாணவர்கள் தகவல் உதவி மையங்களில் சென்று அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி இடத்தை உறுதி செய்ய வேண்டும். இதனால் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் அதற்கு பின்னர் சேராமல் இருப்பதால் ஏற்படும் காலியிடங்கள் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு நேற்று 250 மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 146 பேர் மட்டுமே வருகை தந்தனர்.


Comments

Popular posts from this blog