தேர்வுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: விழுப்புரத்தில் மறியல்





விழுப்புரம் : விழுப்புரத்தில் குரூப் 7 தேர்வுக்கு தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஹிந்து அறநிலையத் துறையில் உள்ள செயலாக்க அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்காக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 7 தேர்வு நேற்று நடந்தது.




விழுப்புரத்தில் அரசு சட்டக்கல்லுாரி மற்றும் தெய்வானை அம்மாள் கல்லுாரி என 2 மையங்களில் தேர்வு நடந்தது.தேர்வு, காலை 9:30 மணிக்குத் துவங்கி மதியம் 12:30 மணி வரை நடைபெறும்.




தேர்வர்கள் காலை 9:00 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.சட்டக் கல்லுாரி தேர்வு மையத்திற்கு காலை 9:00 மணிக்கு மேல் தாமதமாக வந்த தேர்வர்களை போலீசார் மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து கேட்டை பூட்டினர். 




தேர்வு எழுத வந்த 50க்கும் மேற்பட்டோர் தேர்வு அறைக்குச் செல்ல முடியாமல் காத்திருந்தனர்.தங்களை அனுமதிக்கும்படி 9:25 மணிக்கு விழுப்புரம் - திருச்சி சாலையில், வீரன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அரசு நிர்ணயித்த கால நேரத்திற்குள் வரவில்லை என்றால் அனுமதிக்க முடியாது. எனவே, பொதுமக்களுக்கு சிரமம் அளிக்காமல் செல்லும்படி அறிவுறுத்தினர். 




அதனைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு 9:35 மணிக்கு கலைந்து சென்றனர்.தேர்வு எழுத முடியாமல் சென்றவர்கள் கூறுகையில், 'சட்டக் கல்லுாரி தேர்வு மையத்திற்கு ஒரே நுழைவு வாயில் வழியாக அனைத்து தேர்வர்களையும், பரிசோதனை செய்து அனுப்ப அதிகாரிகள் காலதாமதம் செய்தனர். காலை 9:01 மணிக்கு தேர்வு வளாகத்திற்கு முன் நின்றவர்களைக் கூட அனுமதிக்காமல் கேட்டை பூட்டி விட்டனர்' என்றனர்.

Comments

Popular posts from this blog