`பாடம் சொல்லிக்கொடுக்க நேரமில்லை...' புலம்பும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - என்ன காரணம்?!




தமிழ்நாட்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.


இந்தநிலையில், பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ளப் பள்ளிக்கல்வித் துறை கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. ஆனால், இப்பணி இடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் இச்சூழலில் தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் விவரம் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது ஒதுக்கப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறையில் இதுபோன்ற பணிகள் வரும் பட்சத்தில் அவற்றையும் ஆசிரியர்கள் செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.


இந்தச்சூழலில், சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி சமீபகாலமாக மாணவர்களின் உடல்நலம் சார்ந்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு பள்ளிக்கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் (எமிஸ்) தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. அந்தவகையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடு இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து தகவல் தெரிவிக்க அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, வைட்டமின் குறைபாடு, ரத்த சோகை, கண் பார்வை பாதிப்பு, காசநோய், தைராய்டு பிரச்னை, பல் நோய்கள் உள்ளிட்ட 36 வகை நோய்கள் இடம்பெற்றுள்ளன.


இந்த உத்தரவின்படி, மாணவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து 36 வகையான மருத்துவ பரிசோதனைகளை ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டும். மருத்துவர் செய்ய வேண்டிய பணியை ஆசிரியர் பணியில் இருக்கும் ஒருவர் செய்வதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், ஆசிரியர்களும் இப்பணிகள் சிரமாக இருப்பதாகவும், இதனால் தங்களால் மாணவர்களுக்கு முழுமையாகப் பாடங்களை சொல்லிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிருப்தியும் தெரிவித்துள்ளார்கள்.


இதுகுறித்து, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் இரா.தாசிடம் கேட்டபோது, "மாணவிகளுக்கு நேப்கின் வழங்குவது, சத்து மாத்திரிகைகள் வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் அனைவரும் அரசுடன் இணைந்து ஒத்துழைப்போடு தான் செயல்பட்டு வருகிறோம். ஆனால், மருத்துவத்துறை பார்க்கவேண்டிய வேலையை எங்களிடம் திணிப்பதால் கற்றல், கற்பித்தல் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஒரு மாணவருக்கு 36 வகையான செக் அப் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.


ஆசிரியரால் எப்படி இவை அனைத்தையும் செய்ய முடியும். மருத்துவர்களால் தானே இதுபோன்ற பணிகளைச் செய்ய முடியும். அப்படியே நாங்கள் இதைச் செய்தாலும் ஒரு மாணவருக்கு குறைந்தது 15 நிமிடங்கள் வரை விவரங்களை எடுத்து சேகரித்து பதிவிட வேண்டியுள்ளது. இதனால், பணிகள் முழுமையாக பாதிக்கப்படுகிறது. அரசின் திட்டங்களை அனைவரிடமும் கொண்டுசெல்லும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. இருந்தாலும் தெரியாத பணிகளை எங்களிடம் கொடுத்து சங்கடத்திற்கு ஆளாக்குகிறார்கள். எனவே, இதில் உள்ள பிரச்னைகளை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்" என்றார்.

Comments

Popular posts from this blog