ஆசிரியர்களை குறைத்து மதிப்பீடு செய்கிறது திமுக அரசு: ஓபிஎஸ் கண்டனம்



எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில், மாதச்சம்பளம் ரூ.5000 மற்றும் பணிக்காலம் 11 மாதங்கள் மட்டுமே என குறிப்பிட்டுள்ளதை உடனடியாக ஆராய்ந்து மாத ஊதியம், பணிக்காலத்தை நீட்டிக்க உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்களுக்கு தூண்டுகோலாக, வழிகாட்டியாக, உந்து சக்தியாக அவர்களை வெற்றிப்பதையில் அழைத்துச் செல்பவர்கள் ஆசிரியர்கள்.


 மாணவர்களுக்கு கல்வியை மட்டுமல்லாமல், நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும், சமூகத்தை எதிர்கொள்வதற்கான துணிச்சலையும் பயிற்றுவிப்பவர்கள் ஆசிரியர்கள். 'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்பதற்கேற்ப ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்.


இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த ஆசிரியர்களை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையில் திமுக அரசு ஒர் அரசாணையை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.


அண்மையில், 2,381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தும் பள்ளிக் கல்வித் துறை ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது.



இந்த அரசாணையில், மேற்படி சிறப்பாசிரியர்களுக்கான மாதச் சம்பளம் 5,000 ரூபாய் என்றும், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர்களுக்கு போதுமான கல்வித் தகுதி இல்லையென்றால் தொடக்கக் கல்வியில் பட்டயம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர்களுடைய பணிக்காலம் 11 மாதங்கள் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஓர் ஆசிரியருக்கு மாத ஊதியம் 5,000 ரூபாய் என்றால், ஓரு நாள் சம்பளம் என்பது வெறும் 166 ரூபாய்தான். குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின்படி அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் 300 ரூபாய்க்கு மேல்தான் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிபவர்களின் தினசரி ஊதிடம் 281 ரூபாய். குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட அரசு தரவில்லையென்றால், அவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். மேலும் பணிக்காலம் 11 மாதம் என குறிப்பிட்டுள்ளது, அரசுக்கு மழலையர் வகுப்புகளை நடந்த ஆர்வமில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. 


முதலில் மழலையர் வகுப்புகளை நிறுத்த முடிவெடுத்த திமுக அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அதனை தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்ட நிலையில், குறைந்தபட்ச ஊதியத்தை கூட வழங்காமல், 11 மாதங்கள் என கால அளவை நிர்ணயம் செய்து ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. தகுதியான ஆசிரியர்களை நியாயமான ஊதியத்தில் அமர்த்த வேண்டியது அரசின் கடமை.


இதில் ஆசிரியர்களின் நலன் மட்டுமல்லாமல் குழந்தைகளின் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பதை அரசு உணர்ந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்தால் அது அனைவருக்கும் நலம் பயப்பதாக அமையும். இதுகுறித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது.


எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்பு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை குறைந்தபட்சம் 10,000 ரூபாயாக உயர்த்தவும், 11 மாதம் என்ற கால அளவை ரத்து செய்யவும், மேற்படி வகுப்புகளுக்கு நிரந்தரமாக, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுகவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்

Comments

Popular posts from this blog