இன்ஜினியரிங் படிப்பு துணை கலந்தாய்விற்கு 9-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்



இன்ஜினியரிங் படிப்புக்கான பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 சுற்றுகளாக நடைபெறும் இந்த கலந்தாய்வு நடைமுறைகள் 10ம் தேதியுடன் முடிக்கப்பட்டு, 13ம் தேதி இறுதி ஆணை வழங்கப்பட உள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள், அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.



அதன்படி, வருகிற 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த துணை கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம். 


https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வாயிலாகவும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 110 இன்ஜினியரிங் சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம்.


சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 12-ம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி படித்த, தகுதிவாய்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்களும் இந்த துணை கலந்தாய்வில் பங்குபெறலாம். 


இன்ஜினியரிங் முதற்கட்ட கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்ற அறிவிப்பை அண்ணா பல்கலை கழகம் வெளியிட்டுள்ளது.



இன்ஜினியரிங் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், 4-வது சுற்று நிறைவு பெற இருக்கிறது. இந்த நிலையில் முதல் கட்ட கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.


. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பி.இ., பி.டெக். (முழு நேரம்) படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு முதல் செமஸ்டருக்கான அறிமுக வகுப்புகள் வருகின்ற 14ம் தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் வருகிற 28ம் தேதியும் தொடங்குகிறது. இந்த செமஸ்டருக்கான கடைசி வேலைநாள் அடுத்த ஆண்டு (2023) மார்ச் 23ம் தேதி ஆகும். 


அதேபோல் பி.ஆர்க்.(முழு நேரம்) படிப்பில் சேர்ந்தவர்களுக்கு அறிமுக வகுப்புகள் 14ம் தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் 28ம் தேதியும் தொடங்கும் என்றும், இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி கடைசி வேலைநாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.இ., பி.டெக்.(பகுதிநேரம்) மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளன. இவர்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் செய்முறை தேர்வும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வும் தொடங்கி நடைபெறும். 


முதல் செமஸ்டர் முடிந்து, அதற்கு அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு மே மாதம் 15ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


15 நாட்கள் நடக்கும் அறிமுக வகுப்புகளில், மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறை, கல்லூரி குறித்தும், படிப்புக்கு பின்னர் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள், தொழில் முனைவோராவதற்கான வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும். 

Comments

Popular posts from this blog