TNPSC தேர்வு முடிவுகளில் வெளிப்படைத் தன்மை.! தமிழக அரசுக்கு கோரிக்கை.!




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் தேர்தல் அறிக்கை எண்.486-ல், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியாத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தொகுதி 2 மற்றும் 2A பதவிகளுக்கான 5,529 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேர் பங்கேற்றனர்.


 

இந்த முதல் நிலைத் தேர்வு எழுதிய பத்து இலட்சம் பேரில், ஒரு பதவிக்கு பத்து பேர் வீதம் 5,529 பதவிகளுக்கு, முன்னிலை மதிப்பெண் பெற்ற கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர்கள் பிரதானத் தேர்வு எழுத தகுதி உடையவர்கள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து அதற்கான முடிவினையும் வெளியிட்டது. இதன் அடிப்படையில், தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளையும், தாங்கள் ஒவ்வொரு பாடத்திலும் எடுத்த மதிப்பெண்களையும் தெரிந்து கொள்ள முற்பட்டபோது, தேர்வு முடிவுகளை மட்டும் தான் தெரிந்து கொள்ள முடிந்தது என்றும், தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர்.


பொதுவாக, மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வினை நடத்தும் பணியாளர் தேர்வு ஆணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கித் தேர்வுகளை நடத்தும் அமைப்புகள் ஆகியவை தேர்வு முடிவுகளை வெளியிடும்போதே, ஒவ்வொருவரும், ஒவ்வொரு பாடத்தில் பெற்ற மதிப்பெண்களையும் வெளியிடுவது வழக்கம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டதை நானும் கேள்விபட்டு இருக்கிறேன். ஆனால், தற்போதைய குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளில் மதிப்பெண்களின் விவரம் வெளியிடப்படவில்லை. ஒருவேளை, முதல் நிலைத் தேர்வு என்பதால் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படவில்லையா என்று தெரியவில்லை.


 

இதன் காரணமாக, தங்களைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் பிரதானத் தேர்விற்கு தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்பதை கண்டறிய முடியாத சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், அடுத்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்தத் தேர்வின் மதிப்பெண்கள் தங்களுக்கு ஓர் அடிப்படையாக அமையும் என்றும் தேர்வு எழுதியவர்கள் கருதுகிறார்கள். மதிப்பெண்களை வெளியிடாதது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog