நெருங்கும் பொதுத்தேர்வு.. நெருக்கடியில் மாணவர்கள்.. அரசு செவி சாய்க்குமா?



முன்பு படித்த பள்ளிகளின் உறுதி சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும் என சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பிறப்பித்த உத்தரவால் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், இந்த 2022-23ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு எழுதுவதற்கு தாங்கள் முன்னர் படித்த பள்ளிகளிலிருந்து எந்த பிரிவில், எந்த மாெழியில் படித்தார்கள் என்பதற்கான 'உறுதிச் சான்றிதழ்' (Bonafide certificates) வாங்கி வர வேண்டும் என சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் துறை ஆண்டுதோறும் தயாரிப்பது வழக்கம். அந்தவகையில் வரக்கூடிய மார்ச், ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம் ஆகின.


சிரமத்தில் பள்ளி மாணவர்கள்: இதனிடையே முன்னதாக, மாணவர்களின் பெயரை சேர்ப்பதற்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலும், அரசு பள்ளி அல்லது தனியார் பள்ளியா?, தமிழ்வழியா (அ) ஆங்கில வழியில் படித்தார்களா? என மாணவர்கள் உறுதிச் சான்றிதழ் எனப்படும் Bonafide certificates சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பொதுத்தேர்வு எழுதும் 11ஆம் வகுப்பு மாணவர்களும்,12ஆம் வகுப்பு மாணவர்கள் முன்பு எங்கு படித்தார்கள் என்கிற விவரங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தேர்வின் இடையே மேலும் மனஉளைச்சல்: இந்நிலையில், இந்த சான்றிதழ்களை சமர்ப்பிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. ஒரு மாணவர் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தொடக்க நிலை வகுப்புகளை வேறு மாநிலத்திலோ (அ) வேறு நாட்டிலோ பயின்று இருக்கலாம். அவ்வாறு மாணவர்கள் படித்த பள்ளி காலப்போக்கில் மூடப்பட்டிருக்கலாம். இது போன்ற நிலைமையில், குறிப்பிட்ட மாணவர் Bonafide Certificate சமர்ப்பிப்பது சாத்தியமில்லை. மேலும், பொதுத்தேர்வு இன்னும் 2 மாதங்களில் தொடங்க உள்ள நிலையிலும், தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் சான்றிதழ் வாங்க அலையவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்காகவும், அரசுப் பள்ளியில் 6 முதல் 12 வரை படித்த மாணவிகளுக்கான உதவித்தொகையினை வழங்குவதற்காகவும் பொதுத்தேர்வு பெயர் பட்டியல் தயாரிக்கின்ற போதே இந்த விவரங்களை பெற சொல்லி உள்ளனர்.


மதிப்பெண் சான்றிதழ்களில் அடங்குமா?: மேலும், வேலைவாய்ப்புகள் என எடுத்துக் கொண்டால், தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழை வழங்க வேண்டியுள்ளது. இனிமேல், மதிப்பெண் சான்றிதழின் பின் பகுதியில் மாணவர்கள் படித்தப் பள்ளி, பயிற்று மொழி ஆகியவற்றினை பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டால் தேவைப்படும் போது எளிதில் பெற முடியும்' எனவும் தெரிவிக்கின்றனர்.


 வீர பெருமாள்

காலதாமதமான பணிகளால் சிரமத்தில் மாணவர்கள்: இதுகுறித்து தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நல சங்கத்தின் பொருளாளர் வீர பெருமாள் கூறும்போது, 'இந்தப் பணிகளை பொதுத்தேர்வு நெருக்கத்தில் அல்லாமல் முன்கூட்டியே முடித்திருக்க வேண்டும். பொதுத்தேர்வு நெருக்கத்தில் சான்றிதழ் வாங்கசொல்வது தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும்' எனத் தெரிவிக்கின்றார்.


மேலும், 'இந்த முறையை நிறுத்திவிட்டு, அடுத்தாண்டில் முன்கூட்டியே பெற வேண்டும்' எனத் தெரிவித்தார். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மார்ச் மாதம் தொடங்க உள்ள பொதுத்தேர்வை 10, 11, 12ஆம் வகுப்புகளைச் சார்ந்த 27 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog