அதிருப்தி அளிக்கும் டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டம்.. அவுட்சோர்சிங் முறையை கொண்டுவர அரசு திட்டமா?





அண்மையில் வெளியான 2023 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டத்தால் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், 'அவுட்சோர்சிங் முறை'யில் பணி நியமனம் செய்ய அரசாணை 115-ஐ செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதோ?என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commission - TNPSC) மூலம் நேற்று டிச.15 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட, வரும் 2023ஆம் ஆண்டு போட்டித் தேர்விற்கான அட்டவணையில் குறைந்த எண்ணிக்கையில் பணியிடங்கள் காண்பிக்கப்பட்டுள்ளதால்,அவுட்சோர்சிங் முறையில் (Outsourcing method) பணி நியமனத்திற்கு வெளியிடப்பட்ட அரசாணை 115-ஐ செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


குரூப்-1 மற்றும் குரூப்-2 பணியிடங்களுக்கு 2022 ஆண்டிற்கான அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களுடன், 2023ஆம் ஆண்டில் முதன்மைத்தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சேர்க்கப்படும் என டிஎன்பிஎஸ்சியின் செயலாளர் தெரிவித்தார்.


டிஎன்பிஎஸ்சி 2023ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட உள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணையில், குரூப்-4 தேர்வுகள் தவிர்த்து, ஓராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டும்தான் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கல்வித் தகுதிகள் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்புகள் ஆகும். இந்தப் படிப்புகளை முடித்த மாணவர்கள் அரசுப் பணிக்குத் தயாராகி வருகின்றனர்.


மேலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்தது. இதனால், அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியைப் பெறுவதற்கும் இளைஞர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.


அவுட்சோர்சிங் முறை: இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மனிதவளத்துறையின் சார்பில் அக்.18 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை 115-ல் அரசின் பணியைச் செய்வதற்குத் தனியார் நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்சிங் முறையில் ஆட்களைத் தேர்வு செய்வது குறித்து அறிக்கை அளிக்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


இதனிடையே, நேற்று வெளியிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டிற்கான உத்தேச ஆண்டு கால அட்டவணையில், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 போன்று அதிகளவில் அனுபவம் இல்லாமல் நேரடியாக நிரப்பப்பட வேண்டிய தேர்வுக்கான அறிவிப்புகள் இல்லாமல் உள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன்நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் ஆண்டிற்கு வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையில் முக்கியப் பதவிகளான குரூப்-1, குரூப்-2 பணியிடங்கள் அறிவிக்கப்படவில்லை. மேலும், குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படும் எனவும், அதற்கான தேர்வுகள் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் 12 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதற்கிடையே அவர்களுக்குள் 30% இடங்கள் காலியாக இருக்கிறது.


அதிருப்தியான டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டம்; அவுட்சோர்சிங் முறையை கொண்டுவர அரசு திட்டமா?


பணிசுமைக்கிடையே அரசாணை-115 அமலா? தலைமைச் செயலகத்தில் 40% பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், ஊழியர்கள் அதிகளவில் பணிச்சுமையுடன் பணிபுரிந்து வருகின்றனர். கடைநிலை பணியிலும் அவுட்சோர்சிங் முறையை அமல்படுத்தும் அரசாணை 115-ஐ அமல்படுத்தும் விதத்தில் டிஎன்பிஎஸ்சியின் கால அட்டவணை இருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படும் வகையில் உள்ளது.


முதலமைச்சர் கவனம் தேவை: 'திராவிட மாடல்' (Dravidian Model) என கூறும் ஆட்சியில், சமூக நீதி என்பது இல்லாமல் போகும் நிலையில் அறிவிப்புகள் உள்ளது. எனவே, கால அட்டவணையில் திருத்தங்களை செய்யவும், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளையும் சேர்த்து வெளியிடுவதற்கு முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை மேற்காெள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.


ரேடியன் ஐஏஎஸ் அகடாமியின் (Radian IAS Academy) நிறுவனர் ராஜபூபதி காணொளி வாயிலாக நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் அளித்த பேட்டியில், 'டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள ஆண்டு கால அட்டவணையில் எந்த ஒரு முக்கியமான தேர்வும் இடம் பெறவில்லை. குரூப்-4 தேர்வும் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, 2024-ல் தேர்வு நடக்கிறது. 2023 ல் முக்கியமானத் தேர்வுகள் எதுவும் இல்லை.


குரூப்-1 போன்ற தேர்வுகள் யுபிஎஸ்சி தேர்வுகள் (UPSC) போன்று ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். குரூப்-1 தேர்விற்கு வயது வரம்பு தளர்வு கரோனா தொற்றால் 2 ஆண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வயது தளர்வு அளிக்காமல் இருப்பதால் தேர்வர்கள் பாதிக்கப்படுவர்.


ஏமாற்றத்தில் போட்டித் தேர்வர்கள்: அதேபோல், குரூப்-2 பணிக்குச் செல்வதற்காக அதிகளவில் மாணவர்கள் படித்துக்கொண்டு இருக்கின்றனர். பொதுத்துறை நிறுவனங்கள், ஆவின், மின்சார வாரியம் போன்றவற்றுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அது குறித்த அறிவிப்பும் வராமல் இருப்பதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


திமுக அரசு அமைந்தால் ஆண்டிற்கு ஒரு லட்சம் பேர் நியமிக்கப்படுதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். மேலும் தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாளர் நியமனம் செய்யப்படுவார்கள் என அரசாணை வெளியிட்டனர். தற்போது அந்த அரசாணையையும் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனாலும், அரசாங்க பணியில் அவுட்சோர்சிங் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.


அரசுக்கு கோரிக்கை: அரசு பள்ளி மாணவர்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் தனியார் துறைக்கு பணிக்கு சென்றால் குறைந்த சம்பளத்தால் பாதிக்கப்படுவார்கள். கரோனா காலத்தில் பணிக்கான தேர்வுகள் இல்லாமல் இருந்தது. கால அட்டவணை தேர்வு பணிக்கு எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.


இந்த அட்டவணை ஆண்டு தேர்வு அறிக்கையா, மாதத் தேர்வு அறிக்கையா? எனத் தோன்றுகிறது. அனைவரும் எழுதக்கூடிய போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு இல்லாத நிலைமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே, அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டுத் தகுந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும்' என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.



Comments

Popular posts from this blog