TN GOVT JOB: தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுப் பணி.. தமிழக அரசு அதிரடி



தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு, அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.



இந்நிலையில், தமிழ்மொழியை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது, தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


அரசுப்பணி:


அதன்படி, 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், "தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் செய்யப்பட்டு அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழில் தேர்ச்சி கட்டாயம்:


இந்த மசோதா தொடர்பாக பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை செயல்படுத்தும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது” என விளக்கமளித்தார்.


”வெளிமாநிலத்தவர்களை அனுமதிக்கக் கூடாது”


மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன், "திருத்தம் செய்யப்பட்டுள்ள சட்டத்திலும் விண்ணப்பிக்கக் கூடிய நபர் எவரும் என குறிப்பிடப்பட்டு உள்ளதால், பிற மாநிலத்தவரும் அரசுப்பணிக்கான தேர்வெழுத வாய்ப்புள்ளது. வடமாநிலத்தைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் சிலர் ஆட்சியாளர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலத்தில் தமிழை பயின்று அரசுப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றால் என்ன செய்வது? ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் குடியிருக்கும், தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதும் வகையில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் இச்சட்டம் பேராபத்தை ஏற்படுத்தி விடும். எனவே இதனை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்", என கோரிக்கை வைதார்.


அரசுக்கு கோரிக்கை


வெளி மாநிலத்தவரையும் தேர்வெழுத அனுமதித்தால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கையேந்தும் சூழல் உருவாகும் என பாமக உறுப்பினர் ஜி.கே.மணியும், உறுப்பினர்கள் கோரும் திருத்தங்களை மேற்கொண்டால் தமிழக மக்கள் அனைவரும் சட்டத்தை வரவேற்பார்கள் என, விசிக உறுப்பினர் ஆளூர் ஷாநாவாஸும் வலியுறுத்தினர்.


மசோதா நிறைவேற்றம்:


இறுதியாக பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், இன்றைக்கே இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இன்றைக்கு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வராவிட்டால், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்பதே ரத்தாகி விடும். எனவே, இந்த சட்டமுன்வடிவை அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும். உறுப்பினர்கள் கோரிய திருத்தங்கள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”, எனவும் உறுதியளித்தார். இதையடுத்து, பேரவையில் இருந்த உறுப்பினர்களின் ஆதரவோடு, அரசுப்பணிக்கான தேர்வில் தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Comments

Popular posts from this blog