இனி இணைய வழியில் B.Ed., படிக்கலாம், ஐஐடி மெட்ராஸின் புதிய அறிவிப்பு! 



பள்ளி ஆசிரியர்களிடையே கணித பாடத்தின் பயிற்றுவித்தல் தரத்தை மேம்படுத்த இணைய வழி B.Ed வகுப்புகளைத் தொடங்கவிருக்கிறது ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம். சமீபத்தில் நடந்த G20 கருத்தரங்கில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் காமகோட்டி தெரிவித்திருக்கிறார்.


கடந்த வாரம் நடைபெற்ற G20 கருத்தரங்கில் ஒன்பது நாடுகளுக்கும் மேலான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். அந்நிகழ்வில் ‘கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் தொடக்கக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை தரத்தை உயர்த்துவது குறித்தான வழிகள் பலவும் விவாதிக்கப்பட்டன.


அதில் பங்குபெற்ற மத்திய அரசின் உயர்கல்வி செயலாளர் சஞ்சய் மூர்த்தி பேசுகையில், “அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து கற்றலின் தரத்தை உயர்த்துவதற்கான அருமையான வாய்ப்பு நமக்குள்ளது. அதை நாம் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.


அதைத் தொடர்ந்து, “நிகழ்கால உலகில் ஒவ்வொரு மூன்றாண்டுக்கு ஒரு முறை நம் திறன்களை மறு ஆய்வு செய்து அதை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உள்ளது“ என்றார் மத்திய திறன் மேம்பாட்டுச் செயலாளர் அதுல் குமார் திவாரி. 


இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஆன்லைன் B.Ed வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தரவுகளின் படி கணிதப்பாடத்தை முறையாகக் கற்க இயலாத காரணத்தால் தொடக்கக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை சுமார் 30% மாணவர்கள் பல்வேறு கட்டங்களில் தங்கள் கல்வியை நிறுத்துகின்றனர்.


 இதற்கான மாற்றம் ஆசிரியர்களிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்பதால் ஐஐடி மெட்ராஸின் இந்த ஆன்லைன் B.Ed வகுப்புகள் நல்லதொரு தொடக்கப்புள்ளி. இதற்கான விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Comments

Popular posts from this blog