எங்கும் ஆப்சென்ட் - ஆசிரியர் தகுதித்தேர்வு 2 தாளை எழுத வராத 1 லட்சம் 47 ஆயிரத்து 632 பேர்!



ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாள் எழுதுவதற்கு 4 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்திருந்த நிலையில் 1 லட்சம் 47ஆயிரத்து 632 பேர் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.



ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளை எழுதுவதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 4 லட்சத்து ஆயிரத்து 856 பேர் தகுதிபெற்று, அவர்களுக்கான தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. 


இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வினை 2 லட்சத்து 54 ஆயிரத்து 224 பேர் எழுதியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. பதிவு செய்த ஹால் டிக்கெட் பெறுவதற்கு தகுதி பெற்ற ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 632 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் எழுதாமல் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வினை பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் 23 பிரிவுகளாக பிரித்து ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட தேர்வினை

2,54,224 எழுதினார்கள்.


விடைகள் மீது தேர்வர்கள் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இணையதளத்தில் 16,409 நபர்கள் 1364 வினாக்கள் மீது தங்களின் சந்தேகங்களை பதிவு செய்தனர். சந்தேகங்கள் வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன.

அதன் அடிப்படையில் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் தனித் தனியாகவும், அனைத்து தேர்வுகளின் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளனர். மேலும் 4 தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என அதில் கூறியுள்ளார்.


ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 கட்டங்களாக பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 188 இடங்களில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்த தேர்வுக்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேர் விண்ணப்பித்தனர். 


இவர்களில் 4 லட்சத்து ஆயிரத்து 856 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 5313 மாற்றுத்திறனாளிகளும், கண் விழி பார்வை குறைவடையோர் 1218 பேரும் , 2662 சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதுவதற்கு இரண்டு லட்சத்து 21ஆயிரத்து 240 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் தேர்வு எழுத 1 லட்சத்து 80 ஆயிரத்து 616 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இத்தகவலை ஹால் டிக்கெட் வெளியிடும்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு தாள் ஒன்றுக்கு 2022 அக்டோபர் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்வினை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 233 தேர்வர்கள் எழுதியதில் 21 ஆயிரத்து 543 தேர்வர்கள் மட்டுமே தகுதி பெற்றனர்.


தற்போது வெளியாகி உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்விலும் பெரும்பாலான ஆசிரியர்கள் தகுதி பெறவில்லை எனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளில் தேர்வு எழுத பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், 5 சதவீதம் கூட தகுதி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது.

Comments

Popular posts from this blog