டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஷாக்: தமிழ் மொழித் தாளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் தோல்வி



நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


முன்னதாக, குரூப்-4ல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2022ம்ஆண்டு ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர்.


குரூப்-4 தேர்வு ஒற்றைத் தேர்வு தாள் கொண்ட தேர்வாகும். பகுதி 'அ '-வில் உள்ள கட்டாயத் தமிழ் பகுதியில் 100 வினாக்களும், பகுதி 'ஆ' வில் பொது அறிவு பாடத்தில் 75 வினாக்களும், கணித அறிவில் பாடத்தில் 25 வினாக்களும் இடம்பெற்றன. இதில், பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% ( அதவாது 60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பகுதி 'ஆ'-விற்கான விடைகள் திருத்தப்படம் என்றும் தெரிவிக்கப்பட்டது.


 


முந்தைய, குரூப் 4 தேர்வுகளில், கட்டாய மொழிப் பாடங்களில் தமிழ் (அ) ஆங்கிலம் என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை தமிழ் மொழி மட்டுமே தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக அறிவிக்கப்பட்டது.


இதற்கிடையே, கடந்த மார்ச் 24ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான தேர்வர்கள் குரூப் 4 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியவில்லை என புகார் அளித்து வந்தனர்.


இந்நிலையில், 5 லட்சத்துக்கும் கூடுதலான தேர்வர்கள் தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தாளில் தேர்ச்சி பெறவில்லை என்றும், இத்தகைய தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

Comments

Popular posts from this blog