முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First generation graduate certificate) பெறுவது எப்படி?



தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும், மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது. கடந்த 2010 ம் வருடத்திலிருந்து இதற்கென தனி அரசாணை பிறப்பித்து இந்தச் சலுகையை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.


அந்த அரசாணையில், ‘அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களின் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையெனில் எந்தச் சாதிபாகுபாடுமின்றி, வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என குறிப்பிட்டுள்ளது.


அதாவது அந்த மாணவ-மாணவியின் ‘டியூஷன் ஃபீஸ்’ எனப்படும் கல்விக் கட்டணத்தை மட்டுமே அரசு செலுத்தும்.


 உதாரணத்திற்கு, சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கான ஆண்டுக் கட்டணம் இரண்டரை லட்சம் ரூபாய் என்றால் கல்விக் கட்டணமான ரூ.1.25 லட்சத்தை அரசே செலுத்தும். மீதித் தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும்.


அதேபோல ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை உண்டு. மேலும், கடந்த ஜனவரி மாதம் இந்தச் சலுகையை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


ஆனால், இந்தக் கல்விச் சலுகைக்குத் தகுதியுள்ள மாணவர்கள், ‘முதல் தலைமுறை பட்டதாரி’ என்கிற சான்றிதழை அரசிடம் பெற்று கல்லூரி விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டியது அவசியம்.


இந்தச் சான்றிதழைப் பெறுவது எப்படி?


கடந்த காலங்களில் இந்தச் சான்றிதழ் பெற பெற்றோரையும், மாணவர்களையும் அலைய விட்டதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இதனால், கடந்த வருடம் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை கொடுப்பதற்கு முன்பே மாணவர்களை முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது அண்ணா பல்கலைக்கழகம். இருந்தும், இந்தச் சான்றிதழைப் பெற நடையாய் நடக்கிறார்கள் மாணவர்கள்.


யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?


முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழிற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களின் அருகிலுள்ள கடைகளில் கிடைக்கின்றன. அல்லது இணையத்தின் வழியாகவும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆனால், பெரும்பாலும் இந்தச் சான்றிதழ் எந்தப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்கிறோமோ அந்தப் படிப்பின் விண்ணப்பத்துடனே தரப்படுகிறது. இந்தச் சான்றிதழைப் பெற தாசில்தாருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். 


எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?


தாசில்தார் அலுவலகத்தில் முதல் பட்டதாரி மாணவர்க்கான சான்றிதழ் பெற வேண்டும் அல்லது 

தமிழக அரசின்

www.edistrict.tn.gov.in

என்ற மின் - ஆளுமை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


இந்த இணையதளம் சில நேரங்களில் இயங்காத போது நேரடியாக அலுவலகம் சென்று விண்ணப்பங்களை வாங்கலாம்.


விண்ணப்பம் எப்படியிருக்கும்?


விண்ணப்பம் தாசில்தார் நேரடியாக கையொப்பமிட்டு சான்றிதழ் வழங்கும் வகையிலேயே இருக்கும். ஆனால், இதில் உங்கள் பெயர், தந்தை, தாய் பெயர், பிறகு உங்கள் தந்தையின் அப்பா, அம்மா பெயர்கள்(தாத்தா, பாட்டி), அம்மாவின் அப்பா, அம்மாவின் பெயர்கள், உடன்பிறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் வயது ஆகியவற்றை எழுதி, அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.


பிறகு இதனுடன், உறுதிமொழி விண்ணப்பம் ஒன்றையும் இணைத்து கொடுக்க வேண்டும். அதில், ‘குடும்பத்தில் யாரும் பட்டதாரிகள் இல்லையென உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கும் பகுதியின் கீழ் உங்கள் கையெழுத்தும், அதன்கீழ் பெற்றோர் அவர்கள் கையொப்பத்தையும் இடவேண்டும்.


 ஏனெனில், தாத்தா, பாட்டியின் கல்வித் தகுதியை அதிகாரிகளால் விசாரிக்க முடியாமல் போகலாம். அதற்காக பெற்றோர் கையொப்பமிட்ட உறுதிமொழிச் சான்று அவசியமாகிறது.


நிறைவில் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், சரி பார்ப்பிற்குப் பிறகு தாசில்தாரிடம் கையொப்பம் பெற்று சான்றிதழைப் பெறவேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்க


வேண்டியவை என்னென்ன?


தந்தை, தாய், உடன்பிறந்தவர்கள் ஆகியோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகல் இதனுடன் இணைக்கப்பட வேண்டியது அவசியம்.


எத்தனை நாட்களில் கிடைக்கும்?


ஏழு நாட்களில் கிடைத்துவிடும் என்கிறது தாலுகா அலுவலக வட்டாரம்.


தாமதமானால்?


ஒருவேளை இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அந்த மாணவன் அடுத்தகட்டமாக மாவட்ட வருவாய் அலுவலரான டி.ஆர்.ஓ.,வை அணுகி முறையிடலாம். அல்லது மாவட்ட ஆட்சியரை அணுகலாம்.


தவறான தகவல் தந்தால்?


ஒருவேளை மாணவன் தரும் உறுதிமொழி சான்றிதழ் தவறானது எனத் தெரியவந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதேபோல் மாணவனுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மூன்று மடங்காக கணக்கிட்டு அவரிடமிருந்தோ அல்லது அவர் பெற்றோரிடமிருந்தோ பணம் வசூலிக்கப்படும்.


மாணவர் படித்து முடித்த பின்னர் உறுதிமொழிச் சான்றிதழ் தவறு எனத் தெரிய வந்தாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறது, தமிழக அரசின் அரசாணை.


முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான படிப்புக்கட்டணச்சலுகை

(First Graduate Concession)


விண்ணப்பத்துடன் வழங்கப்படும் விளக்கத் தகவல் குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தில் உள்ளபடி, வருவாய்த் துறையின் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்குக் குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் போதே இந்தச் சான்றிதழையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


குடும்பத்தில் அப்பா, அம்மா, அவர்களது பெற்றோர், மாணவியின் சகோதர, சகோதரிகள் உள்ளிட்டவர்கள் இதுவரை பட்டப் படிப்பு படிக்கவில்லை என்பதை உத்தரவாதப்படுத்தும் வகையில் மாணவரும் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் குறிப்பிட்ட படிவத்தில் உறுதி மொழி அளித்து கையெழுத்திட வேண்டும். இந்தப் படிவங்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.  


சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுய ஆதரவுப் படிப்புகளிலும் (செல்ஃப் சப்போர்ட்டிங் கோர்ஸ்) சேரும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் முதல் தலைமுறை பட்டதாரிக்கான கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் படிக்கும் 5 சதவீத மாணவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டியது அவசியம்.


இந்தச் சலுகை பெறும் மாணவர்கள், முதலில் தேர்வு செய்த கல்வி நிறுவனத்தையோ, படிப்பையோ மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது. ஏஐசிடிஇ வழங்கும் படிப்புக் கட்டணச் சலுகை பெற விரும்புபவர்கள் அதற்கான விருப்பத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும்.


தேவையான ஆவணங்கள்:


1. விண்ணப்பதாரரின் புகைப்படம்

2. குடும்ப அட்டை

3. குடும்ப உறுப்பினர் கல்வி குறித்த விபரம்

4. பள்ளி மாற்று சான்றிதழ்

5. மதிப்பெண் பட்டியல்

Comments

Popular posts from this blog