NEET Exam 2023 Analysis: இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினம்; நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் ரியாக்ஷன்



நீட் தேர்வில் உயிரியல் பாடங்களில் இருந்து கேள்விகள் எளிமையாக இருந்தன; வேதியியல், இயற்பியல் கடினம்; மாணவர்கள் கருத்து


நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது என இப்போது பார்ப்போம்.


தேர்வில் உயிரியல் பாடங்களில் இருந்து கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டதாகவும், அதேநேரம் இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்வுக்கு வழங்கப்பட்ட நேரம் போதவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு நீட் தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும், இதில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு சரியான கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் என மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது.


அரியலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த 'நீட்' தேர்வை 2,039 பேர் எழுதினர். இந்த தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.


உயிரியல் கேள்விகள் எளிது


அரியலூரை சேர்ந்த ஜனனி:- 'நீட்' தேர்வுக்கான நுழைவுத் தேர்வில் உயிரியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தன. இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தன.


செங்கராயகட்டளை பகுதியை சேர்ந்த மாணவர் சரவணன்:- நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் உயிரியல் கேள்விகள் சுலபமாக இருந்தன. இயற்பியல் பகுதியில் மட்டும் கணிதம் தொடர்பான கேள்விகள் சற்று கடினமாக இருந்தது.


இயற்பியல், கணிதம் கடினம் (physics numerical problems)


கீழப்பழுரை சேர்ந்த உமா மகேஸ்வரி:- உயிரியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் சுலபமாக இருந்தன. ஒரு சில கேள்விகள் குழப்புவதாகவும், சிந்தித்து பதில் அளிக்க வேண்டியதாக இருந்தது. இயற்பியல் பகுதியில் கணிதம் சம்பந்தமான கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. மற்றபடி அனைவரும் தேர்வில் வெற்றி பெற கூடிய அளவிலேயே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.


கீழப்பழுரை சேர்ந்த மாணவி ஸ்ரீதேவி:- மாணவிகளுக்கு தேர்வு அறைக்கு அனுப்பும் முன்பு நடைபெற்ற சோதனைகள் சற்று கடினமாக இருந்தது. தேர்வை பொறுத்தவரை சுலபமென்றே கூறலாம். இயற்பியல், வேதியியல் பகுதி கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்தன. அனைவருக்குமே உயிரியல் கேள்விகள் சுலபமாக இருந்தது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog