TN 12th Result 2023: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள், நேரம் இதுதான்: 5 வழிகளில் பார்க்கலாம் - எப்படி?



12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளன.



இதை அரசு இணையதளம், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பார்க்கலாம். 


தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதினர்.


முடிந்த விடைத்தாள் திருத்தம்


இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள் ஏப்ரல் 10ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணியை முதுகலை ஆசிரியர்கள் தொடங்கினர். விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்ற நிலையில், விடைத் தாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டன. 


முன்னதாக மே 5ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்தன. எனினும் மே 7ஆம் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்க, நீட் தேர்வு முடிவுக்குப் பிறகு, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்தனர். 


இதற்கு செவிசாய்த்த பள்ளிக் கல்வித்துறை, மே 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை அரசுத் தேர்வுகள் துறை முடுக்கி உள்ளது. 


எத்தனை மணிக்குத் தேர்வு முடிவுகள்?


12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளை, மே 8ஆம் தேதி காலை 9.30-க்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.


எப்படிப் பார்ப்பது?


மாணவர்கள் 


www.dge1.tn.nic.in , 

www.dge2.tn.nic.in , 

www.dge.tn.gov.in ,

www.tnresults.nic.in 


ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.


பிற வழிகள் 


மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.


அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


மேலும் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog