பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் வேலை வாங்கி தருவதாக புரோக்கர்கள் வசூல்!!!



ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களில், பள்ளி மேலாண்மை குழு சார்பில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சில அரசியல் புரோக்கர்கள் தற்போதே எம்.எல்.ஏ., அமைச்சர் சிபாரிசில் வேலை வாங்கி தருவாக கூறி ரூ.5 லட்சம் வரை பேரம் பேசி வருகின்றனர்.


நடப்பு 2023-24ம் கல்வியாண்டில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நிரப்பலாம்.


மதிப்பூதியம் மாதம் முறையே ரூ.12ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையும், முதுகலைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும், என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


இதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்பட உள்ளனர். முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு எந்தப்பள்ளியில் காலியிடம் உள்ளது என தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்றனர்.


அவர்களிடம் சில அரசியல் புரோக்கர்கள், அமைச்சர், எம்.எல்.ஏ., சிபாரிசில் தற்காலிக ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ. 3 முதல் 5 லட்சம் வரை கேட்கின்றனர்.


கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் கண்காணிக்கிறோம். மாணவர்கள் நலன் கருதி பள்ள மேலாண்மை குழு மூலம் ஆசிரியரை நியமிக்கலாம். இப்பணி நிரந்தரம் கிடையாது.


வேறு ஆசிரியர்கள் அந்த பணியிடத்துக்கு வரும் வரை பணிபுரியலாம். எனவே விண்ணப்பதாரர்கள் அரசியல்வாதிகள், புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம், என்றனர்.

Comments

Popular posts from this blog