Engineering Admission : பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; முதல் மூன்று இடங்களிலும் மாணவிகள் அசத்தல்!




2023 -2024ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழத்தில் கீழ் செல்லப்படும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு ரேங்க் லிஸ்ட் எனப்படும் மதிப்பெண் தரவரிசை வெளியிடப்பட்டது.


பொறியியல் படிப்பில் சேர்வதற்காக மாணவர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரேங்க் லிஸ்ட் வெளியானது. இந்த பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம பேசுகையில்,


இந்தாண்டு 1,87,847 ஆயிரம் பேருக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டைவிட, சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கு 7.5 இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 


அதில் 31,445 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், 15,136 மாணவர்களும், 13,284 மாணவிகளும் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம் கிடையாது என தெரிவித்தார்.


7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கடந்தாண்டு 28,425 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இந்தாண்டு 5,842 மாணவர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர். இந்தாண்டு அரசு பள்ளியில் படித்த 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 


வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் 405 மாணவர்களும், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் 20,084 பேர் இடம்பெற்றுள்ளனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


200க்கு 200 மதிப்பெண்களை 102 மாணவர்கள் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில கல்வியில் படித்தவர்கள். 


இந்த மதிப்பெண் தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா எனும் பெண் முதலிடமும், தர்மபுரியை சேர்ந்த ஹரிணிகா எனும் பெண் இரண்டாமிடமும், திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு என்பவர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.


அரசு பள்ளியில் படித்த மாணவர்களில் சைதைபேட்டையை சேர்ந்த மகாலட்சுமி எனும் மாணவி 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடமும் , நாகையைச் சேர்ந்த நிவேதிதா எனும் பெண் இரண்டாமிடமும் , கோவையை சேர்ந்த சரவணகுமார் எனும் மாணவர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.


இந்த பொறியியல் படிப்பிற்கான மதிப்பெண் தரவரிசை பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால வரும் 30.06.2023க்குள் மாணவர்கள் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


மேலும், நீட் தேர்வு கலந்தாய்வு இன்னும் நடத்தப்படாமல் இருப்பதால், கலந்தாய்வு தேதி தள்ளிப்போகும் என கலந்தாய்வு தொடக்க தேதியை அமைச்சர் பொன்முடி அறிவிக்கவில்லை.


2023-24ம் ஆண்டு பொறியியல் படிப்புக்களுக்கான தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணைய முகவரியில் காணலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.


மாநில கல்விக்கொள்கை வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 


முதலிடம் பிடித்த மாணவி நேத்ரா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்றவர். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிறுதொண்டை நல்லூரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

Comments

Popular posts from this blog