SLET Exam: கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு நடத்தப்படுமா...? உயர்கல்வித்துறை தரப்பில் விளக்கம்..!




SLET Exam: கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


SLET தேர்வு


நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் (NET) தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு நடத்தும் நெட் தேர்வு ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் சார்பில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டில் சுமார் 5 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கிறது. இதனால் உயர்கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வந்தது. ஆனால், மற்ற மாநிலங்களில் மாநில அரசின் தகுதித் தேர்வு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. 


5 ஆண்டுகள் 


பல்கலைக்கழகம், கல்லூரி போன்றவற்றில் உதவி பேராசிரியர் பணிக்கு PH.D அல்லது NET தேர்வு முடித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசின் யுஜிசி சார்பில் நடத்தப்படும் நெட் தேர்வு சற்று கடினமாக இருக்கும் காரணத்தினால் மாநில அரசு நடத்தும் தகுதித் தேர்வை பெரும்பாலானோர் எழுதிக் கொண்டிருந்தனர். மற்ற மாநிலங்களில் SLET தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 5 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கிறது.


காரணம்


2018ஆம் ஆண்டு கடைசியாக கொடைக்கானல் தெரசா பல்கலைக்கழகத்தின் சார்பில் SLET தேர்வை தமிழக அரசு நடத்தியது. அதன்பின் 5 ஆண்டுகளாக நடத்தவில்லை. 2018ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு மாநில தகுதி தேர்வை நடத்துவதற்கான அனுமதியை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது. ஆனால் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த தேர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், சுமார் 5 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதனால் மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தது. 


உயர்கல்வித்துறை தரப்பில் பதில்


இந்நிலையில், SLET தேர்வு நடத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ”கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (SLET) ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திடம் தேர்வு நடத்துவதற்கான அனுமதி தரப்படும்" என்றும் உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


மேலும், ”நீதிமன்றத்தில் வழக்கு முடியும் நிலையில் இருக்கிறது. எனவே ஆண்டுதோறும் SLET தேர்வு நடத்தப்படும். முதலில் 4 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வு உடனடியாக நடத்தப்படும்" என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 

Comments

Popular posts from this blog