தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கு! தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!!




தமிழ் வழியில் முழுமையாக கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% ஒதுக்கீடு என்ற அரசாணையை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. அதன்படி பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு இது பொருந்தாது என விளக்கமும் தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,' தமிழ், ஆங்கிலம் என இரண்டு வழிகளிலும் கல்வி பயின்றுள்ளேன். இதில் தமிழகத்தில் டி.என்.பி.எஸ்சி குரூப்-1 எழுத்து தேர்வு மார்ச்.4ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக அதற்கு விண்ணப்பித்தும் உள்ளேன். ஆனால் இதையடுத்து தான் மாநில அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீடு என்ற உத்தரவை பிறப்பித்தது. அதனால் அதுசார்ந்த அரசாணை தனக்கு பொருந்தாது என்பதால், தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2022 மார்ச் 3ம் தேதி விசாரணைக்கு வந்தபோது


தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன்,' யாருக்கு 20சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவாக உத்தரவிட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு தான் திருத்தப்பட்ட அரசாணையும் மாநில அரசு வெளியிட்டது. அதனால் இந்த மனுவில் முகாந்திரம் இல்லை என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.


இதையடுத்து நீதிபதிகள் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க மறுத்ததோடு, தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.


இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ்ராய், பங்கஜ் மிட்டல் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தமிழ் வழிக்கல்வியில் பயன்றவர்கள் ஒரு குறிப்பிட்ட துறைக்குள் அடங்கிவாடாமல் அனைத்துறையிலும் சாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டது எனவே இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


இதனையடுத்து, ஸ்ரீராம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இந்த உத்தரவால் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கிய அரசாணை உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog