பாட்டு பாடி போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள்; பேச்சுவார்த்தைக்குப் பிறகும் போராட்டம் தொடர்வதாக அறிவிப்பு!



பணி நிரந்தரம் செய்ய கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், ஆசிரியர்களின் பணி நிரந்தரம் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா கூறியுள்ளார்.


பள்ளிக்கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் போன்ற 8 பிரிவுகளில் சுமார் 12 ஆயிரம் பேர் 2012ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர்.


 பணி நிரந்தரம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். ஆனால், அவர்களுக்கு தொகுப்பூதியத்தில் மட்டும் உயர்வு வழங்கப்பட்டது. பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.


பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை: இந்த நிலையில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 25ஆம் தேதி முதல் துவக்கி உள்ளனர். 


போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள், "12 கல்வியாண்டுகளாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 16 ஆயிரத்து 459 பகுதி நேர ஆசிரியர்கள் முறையான நியமனத்தில் மாணவர்களின் பன்முகத் திறன்களை மேம்படுத்தும் வகையில் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் 10,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம்.


12 ஆண்டாக பணி நிரந்தரப்படுத்த பலமுறை கோரிக்கை மற்றும் போராட்டங்கள் மூலம் வலியுறுத்தியும், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் வாழ்வாதாரத்தை இழந்தும், சமுதாயத்தில் மதிப்பிழந்த போதிலும், மாணவர் நலன் கருதி பணியாற்றி வருகிறோம். 


திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தனர். ஆனால், ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் கடந்தும் அதனை நிறைவேற்றவில்லை.


அரசாணை வெளியிடும் வரை போராட்டம்: கடந்த போராட்டத்தின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன், பி.எப் (PF), இஎஸ்ஐ (ESI) போன்றவையும் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால், அதுவும் இதுவரையில் வழங்கவில்லை" என்று வேதனையுடன் கூறுகின்றனர். 


பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிடும் வரையில் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறி 7வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பள்ளிக்கல்வித்துறை பேச்சு வார்த்தை: இந்த நிலையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு எனவும், விடியல் ஆட்சியில் நித்தம் போராட்டம் நடைபெறுகிறது எனவும் பாட்டு பாடி தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். 


இதனை அடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சேசுராஜா தலைமையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


காலவரையற்ற போராட்டம் தொடரும்: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சேசுராஜா, "கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி முதல் இன்று 7வது நாளாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் தொடர்கிறது.


பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியதன் மூலமாக விரைவாக பரிசீலனை செய்து, துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார். அறிவிப்பு வெளியிடும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும்" என தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog