காலையிலேயே அதிரடி.. சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது..




சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டிபிஐ) டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 


இதில் டெட் ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமனம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. 


இதேபோல் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடத்தி வந்தனர். 


இதில் பெண் ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டுள்ளனர். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு போராட்டம் ந்டைபெற்று வருகிறது. 


முதலில் ஆசிரியர்கள் - கல்வித்துறை அதிகாரிகளின் பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


 இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார். 


தொடர்ந்து போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்படும். இந்தக் குழு அரசிடம் 3 மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும். முதலமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம் என தெரிவித்திருந்தார். 


ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டுமென்ற கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட சங்கங்கள் தெரிவித்திருந்தன.



 இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் டிபிஐ வளாகத்தில் இருந்து பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகேயுள்ள சமூக நலக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog