அரசின் அறிவிப்புகளில் திருப்தியில்லை: போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு




பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மூவர் குழு நியமிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் அறிவித்த நிலையில், அதில் திருப்தி இல்லை என்பதால், போராட்டம் தொடரும் என பகுதிநேர ஆசிரியர் சங்கமும் டெட் ஆசிரியர் சங்கமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.


சென்னை நுங்கம்பாக்கம், டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வாரத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 


டெட் ஆசிரியர்கள் சங்கம் கூறுவது என்ன?


’2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமனம் அளிக்க வேண்டும்’ என்று கோரி, டெட் ஆசிரியர்கள் சங்கம் போராடி வருகிறது. 


இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் கூறுவது என்ன?


இதற்கிடையே சுமார் 20 ஆயிரம் பேரைக் கொண்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இவ்வாறு மொத்தமாக 175-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 


முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கமும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கமும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 


அமைச்சர் அறிவிப்பு


இதற்கிடையே ஆசிரியர்கள் - கல்வித்துறை அதிகாரிகளின் பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அமைச்சரும் ஆசிரியர் சங்கங்களை சந்தித்துப் பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், ’’சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்படும். 3 மாதத்துக்குள் இந்தக் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். பள்ளிக் கல்வித்துறைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர். 


அதேபோல பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். 171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவர். ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுவதால் அவர்கள் விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும்’’ என்று தெரிவித்தார்.


போராட்டம் தொடரும்


இந்த நிலையில், அமைச்சரின் அறிவிப்பில் திருப்தி இல்லை என்பதால், போராட்டம் தொடரும் என பகுதிநேர ஆசிரியர் சங்கமும் டெட் ஆசிரியர் சங்கமும் அறிவித்துள்ளன.

Comments

Popular posts from this blog