10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் வருகிற 27ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்; அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு


 நடைபெறவுள்ள ஏப்ரல் 2024, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வெழுதி பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்:

பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், வருகிற 27ம் தேதி (புதன் கிழமை) முதல், ஜனவரி 10ம் தேதி வரை (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.


தக்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்:


மேற்காண்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், வரும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதியில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 (மேல்நிலை) / ரூ.500 (10ம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்:

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி, அறிவுரைகள் மற்றும் தேர்வுக்கான அட்டவணை ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். 


மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.






Comments

Popular posts from this blog