தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு 100% வேலை உரிமைச் சட்டம்! வேல்முருகன் விடுக்கும் டிமாண்ட்!




தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு 100% வேலை வழங்கும் வகையில் தமிழர் வேலை உரிமைச் சட்டத்தை இயற்றுமாறு வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழக வாழ்வுரிமைக் கட்சி 13வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ''தமிழநாட்டின் வேலை- தமிழர்களின் உரிமை'' என்கிற முழக்கத்தை வென்றுகாட்டி , வடவர்களின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த, உள் நுழைவு அனுமதிச்சீட்டு- முறை கொண்டுவர வலியுறுத்தி, என்.எல்.சி, கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக -அரசு வேலை கோரி ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.


எந்த நோக்கத்திற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கப்பட்டதோ, அந்த பயணத்தின் முதற்கட்ட வெற்றியை பெற்றிருக்கிறது. அதே நேரத்தில், மீட்டெடுக்க வேண்டிய தளங்களும் உரிமைகளும் ஏராளம் உள்ளன. உலகில் முன் தோன்றிய மூத்த குடி, வளமார்ந்த முதன் மொழிக்குச் சொந்த இனம், நீண்ட வரலாற்றையும், வளமார்ந்த பண்பாட்டையும் கொண்டு செம்மாந்து வாழ்ந்த இனம், தனி அடையாளமும், சிறப்பும், இருப்பும் கொண்டு விளங்கிய இனம், அத்தகு தமிழினம் இன்று வீழ்ந்து கிடக்கிறது. 


வாழ்வியலின் அனைத்து தளங்களிலும் - அரசியல், சமூகம், பண்பாடு, பொருளியல் என்ற அனைத்து தளங்களிலும் - வேற்றினத்தின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு கிடக்கிறது. தமிழ்நாட்டுக்கு அப்பாலிருந்து அடுக்கடுக்காக ஏவப்படும் திட்டங்களால் வகுக்கப்படும் கொள்கைகளால், வடிவமைக்கப்படும் சட்டங்களால், இடப்படும் கட்டளைகளால், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறது தமிழ்நாடு. ஆரியத்தின் அரசியல் வடிவமான இந்திய தேசியம் அரியணையில் இருந்து ஆணையிடுகிறது. 


இறையாண்மையை இழந்த தமிழினம் இப்போது தன் இருப்பையும், இருப்பிடத்தையும், இயற்கை வளத்தையும், தன் அடையாளத்தையும், இன இயல்பையும், வேலை வாய்ப்புகளையும் இழந்து கொண்டிருக்கிறது.


 இதை எதிர்த்துத் தான் நம் தமிழ்ச் சான்றோர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே தமிழ் மொழி - இன - நாட்டுப் பாதுகாப்புக்கான செயற்களங்களை அமைத்தார்கள். அவற்றை இலக்கு நோக்கிக் கொண்டு செல்லத் தவறிய தமிழினம் இன்னமும் இழப்புகளைச் சந்தித்து கொண்டு இருக்கிறது. 


இந்திய மாநிலங்களிலேயே இந்திய ஒன்றிய அரசுக்கு நிதியளிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கக்கூடிய ஒரு மாநிலமாக, அதிக அளவில் நிதி வருவாய் வழங்குகிற மாநிலமாக இருக்கிறது. ஆனால், இந்திய ஒன்றிய அரசின் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில், தமிழ்நாட்டிற்கு மிகவும் குறைவான நிதியில் கூட கிள்ளித் தரக்கூடிய நிலை தான் இருக்கிறது. 


தமிழ்நாட்டில் வேளாண் திட்டங்களாக இருந்தாலும் சரி, ரயில்வே திட்டங்களாக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த திட்டமாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டை ஒன்றிய அரசு திட்டமிட்டு வஞ்சித்து வருகிறது. 


இச்சூழலில் தான், தமிழ் நிலத்தில் தன்னுரிமை அரசியல் கை கொள்ளப்பட வேண்டும். தமிழ் இனத்தை அடிமை கொண்ட ஆரியத்தின் மேலாண்மையை, அத்தனை வடிவங்களிலும் அடியோடு பெயர் தெறியவேண்டும். 


சமூகம், பண்பாடு, பொருளியல், அரசியல் என அனைத்துத் தளங்களும் ஆரியத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தை ஏந்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கப்பட்டது. 


எனவே, தமிழினம் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தமிழ் தேசம் தன் இறையாண்மையை மீட்டெடுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு தளத்திலும் தமிழ்த் தேசம் தன்னை இறையாண்மையுள்ள சக்தியாக நிறுவிக்கொள்ள வேண்டும். அதற்கான தன்மானத் தன்னுரிமை போராட்டம் எழவேண்டும். 


இந்த உயர்ந்த இலட்சியத்தை நோக்கி, எதிர் வரும் காலங்களில், தமிழ்த்தேச தன்னுரிமையையும், தமிழர்தம் இறையாண்மையையும் மீட்டெடுக்கும் போராட்டங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என கூறிக்கொள்கிறேன். 


அதே நேரத்தில், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பதவிகளில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு, தமிழ்நாடு அரசு பதவிகளில் தமிழர்களுக்கு 100 விழுக்காடு வேலை உரிமை சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். 


பீகார் அரசைப் போன்று தமிழக அரசும், 'சாதிவாரி' கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிக்கேற்ப இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர வேண்டுமென்ற முழக்கத்தை, இனி வரும் காலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குரல் இன்னும் வீரியத்தோடு ஓங்கி ஒலிக்கும் என்பதை இந்த தைத்திருநாளில் தெரிவித்துக்கொள்கிறேன். 

Comments

Popular posts from this blog