டிப்ளமா, தட்டச்சு பாடத்திட்ட மாற்றம்!




வரும் கல்வி ஆண்டு முதல் (2024-25), டிப்ளமா மற்றும் தட்டச்சு படிப்புக்கு, புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் (DoTE) முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகள், இன்ஜினியரிங் படிப்புகள் போன்றவற்றுக்கு, திறன்சார் கல்விக்கு ஏற்ப, பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. தன்னாட்சி கல்லுாரிகள் (Autonomous institutions), ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டங்களை புதுப்பித்துக் கொள்ள, பல்கலைகள் சார்பில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


தன்னாட்சி அல்லாத கல்லுாரிகளுக்கு, சம்பந்தப்பட்ட பல்கலைகள் மற்றும் உயர்கல்வித்துறை சார்பில், பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, டிப்ளமா இன்ஜினியரிங் மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படிப்புகளை நடத்தும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், பாடத்திட்டங்களை புதுப்பித்து வருகின்றன.


டிப்ளமா படிப்புக்கு, வரும் கல்வி ஆண்டில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, தற்கால வளர்ச்சிக்கேற்ப, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தரவு தொழில்நுட்பம், இன்ஜினியரிங்கில் ரோபாட்டிக் முறையின் பயன்பாடு போன்றவை அதில் இடம் பெறஉள்ளன.


இதற்கான பணிகள்நடந்து வருவதாக, தொழில்நுட்ப கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதேநேரம், தட்டச்சு பயிற்சிக்கான புதிய பாடத் திட்டம், 15 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டு உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம், அடுத்த மாதம் நடத்தப்படும் தேர்வுகளில் அமலாகிறது.


புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளின்படி, ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தட்டச்சு பயிற்சியில் சேர நுழைவு தேர்வு எழுத முடியும். ஏற்கனவே, ஆறாம் வகுப்பு முடித்தவர்கள் தட்டச்சு பயிற்சி நுழைவு தேர்வு எழுதும் திட்டம் நடைமுறையில் உள்ளது.


எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், நுழைவு தேர்வு இன்றி, நேரடியாக இளநிலை தட்டச்சு படிப்பில் சேரலாம். தட்டச்சு முதுநிலை இரண்டாம் தாளில், அரசாணைகள், தொழில் முறை மற்றும் வணிக கடிதங்கள் நீக்கப்பட்டுள்ளன.


அதற்கு பதில், சட்ட நடவடிக்கைகள், சுய விபர குறிப்பு, அலுவல் சார் கடிதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog