ஆய்வக உதவியாளர்களுக்கு இதர பணிகளை வழங்கக்கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு




அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக பராமரிப்பு தவிர இதர பணிகள் வழங்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன், இயக்குநர் க.அறிவொளிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக அடல் டிங்கரிங் ஆய்வகம் (மத்திய அரசின் நிதியுதவி), உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம், மெய்நிகர் வகுப்பறை, பாடம் சார்ந்த இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங்கள், மொழி ஆய்வகங்கள், தொழிற்கல்வி மற்றும் கணித ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.


திறனை மேம்படுத்துதல்: இந்த ஆய்வகங்கள் பள்ளி மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை படைக்கும் திறனைமேம்படுத்துவதற்கு உந்துதலாகஅமையும். இத்தகைய பள்ளிஆய்வகம் மற்றும் அதன் உபகரணங்களை முறையாக பராமரித்து வருவதில் ஆய்வக உதவியாளர்கள் பங்களிப்பு மிகவும்அவசியமாகிறது. எனவே, ஆய்வக உதவியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும், பாடத்திட்ட அடிப்படையில் ஆய்வக செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறவும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.


அதனுடன் ஆய்வக பராமரிப்புபணிகளில் முழுக் கவனம் செலுத்திடும் வகையில் ஆய்வக உதவியாளர்களுக்கு அவர்களுக்கான பணியை மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும்.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறைச் செயலரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


பிற பணிகள் கூடாது: இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறையில் தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆய்வகப் பணிகள் தவிர பிற பணிகளுக்கும் பயன்படுத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன.


இதையடுத்து இந்த உத்தரவைபள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog