TNPSC Group 4 Exam: குரூப் 4- 6244 காலி இடங்கள்; தேர்வு முறை- சிலபஸ் எப்படி?




டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், இந்த தேர்வுக்கான தேர்வு முறை என்ன?


பாடத்திட்டம் என்ன? என்பன உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்ப்போம்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு 28.02.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களில் பெரும்பாலான பதவிகளுக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது தகுதி; 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சில பணிகளுக்கு வயது வரம்பு இல்லை.


தேர்வு முறை: குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதனை கட்டாயம் தேர்வர்கள் எழுத வேண்டும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்.


இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும். தேர்வுக்கான மொத்த கால அளவு 3 மணி நேரம். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 1.5 மதிப்பெண்கள் 200 கேள்விகள் என 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.


தேர்வு நடைபெறும் நாள்: 09.06.2024


பாடத் திட்டம்: தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.


பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். 


திறனறி வினாக்கள் பகுதியில், சுருக்குக, சராசரி, மீ.சி.ம, மீ.பெ.வ, விகிதம், தனிவட்டி, கூட்டு வட்டி, பரப்பளவு, கன அளவு, வேலை மற்றும் நேரம், எண் கணிதம், பகடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.


விண்ணப்பம் செய்வது எப்படி?


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். 


ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.


மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.


இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/1_2024-Tam.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

Comments

Popular posts from this blog