25% இலவச மாணவர் சேர்க்கை விதிகளை மாற்றியமைக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் வலியுறுத்தல்




தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் பயன்பெறும் வகையில் விதிகளை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.


இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.


மாநிலம் முழுவதும் உள்ள 8ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம்.


தமிழகத்தில் 2013-ல் அமல்படுத்தப்பட்ட ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 4.6 லட்சம்குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்விக் கட்டணமாக சராசரியாக ரூ.370 கோடி தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.


இதற்கிடையே வரும் கல்வியாண்டு (2024-25) இலவச சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு ஏப்.22-ம் தேதி தொடங்குகிறது. இத்திட்டத்தில் தகுதியானவர்கள் பயன்பெறும் வகையில் விதிகளை மத்திய, மாநில அரசுகள் மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.


இதுதொடர்பாக பெற்றோர்கள் சிலர் கூறியதாவது: இந்த திட்டத்தின்கீழ் ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்குத்தான் சேர்க்கை தரப்பட வேண்டும். ஆனால், நடுத்தர வர்த்தகத்தை சேர்ந்த பலர், வருமானத்தை குறைவாக காட்டி சேருவதால் தகுதியான ஏழை குழந்தைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகின்றன. இதற்கு சட்டத்தை அரசு முறையாக அமல்படுத்தாததே காரணமாகும்.


அதேபோல், ஆர்டிஇ விதிகளின்படி அரசுப் பள்ளி அருகே உள்ள தனியார் பள்ளிகளில் 25சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை நடத்தக்கூடாது. மேலும், சேர்க்கை பெறும் குழந்தைகளின் வீடுகள் பள்ளியில் இருந்து1 கி.மீ தொலைவுக்குள் இருக்கவேண்டும். ஆனால், விதிமுறை களுக்கு முரணாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதனால் அரசுப் பள்ளி சேர்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


கூடுதல் கட்டணம் வசூல்: எனவே, அரசுப் பள்ளியில் இருந்து குறைந்தபட்சம் ஒரு கி.மீ.தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளில் மட்டுமே 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும். இதுதவிர பெரும்பாலான தனியார் பள்ளிகள் விண்ணப்பித்தபின் பெற்றோர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இதுதொடர்பாக புகார்கள் தந்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.


அதேபோல், கணிசமான சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளிகள் இத்திட்டத்தில் சேர்க்கை நடத்த ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த குறைபாடுகளை எல்லாம் களைந்து தகுதியானவர்கள் பயன்பெறும் வகையில் விதிகளை அரசு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog