தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் புதிதாக 3.24 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளி கல்வி துறை தகவல்




அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக 3 லட்சத்து 24 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை எண்ணிக்கை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 


அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள், உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000 மாதாந்திர ஊக்கத்தொகை, இந்த ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான ஊக்கத்தொகை திட்டம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.


இதுதொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களும், பேரணிகளும் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி அரசு பள்ளிகள் நுழைவு வாயில் முன்பு விளம்பர அறிவிப்பும் வைக்கப்படுகின்றன.


கணிசமாக அதிகரிப்பு: வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணியை மார்ச் 1-ம் தேதி தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீவிர முயற்சிகள் காரணமாக அரசு பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.


அந்த வகையில், அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இதுவரை 2 லட்சத்து 38 ஆயிரத்து 623 மாணவர்களும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 61,142 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.


அதேபோல், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 23,370 மாணவர்களும், அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1,749 பேரும் புதிதாக சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

Comments

Popular posts from this blog