தமிழ்நாட்டில் 1.55 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப முடிவு .. எந்த துறையில் எவ்வளவு பணியிடங்கள்?





தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 24 ஆயிரத்து 599 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 8,616 பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 4,329 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 19 ஆயிரத்து 472 பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளதாக அமைச்சர் கயல்விழி கூறினார்.


விரைவில் 1.55 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறினார். எந்தெந்த துறையில் எவ்வளவு பணியிடங்கள் நிரப்படும் என்பதை பார்ப்போம்.


தமிழகத்தில் பலருக்கும் அரசு பணியில் சேர வேண்டும் என்கிற கனவு உள்ளது. அவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் 1.55 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையில் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு நேற்று பதில் அளித்து துறையின் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசிய போது இந்த தகவலை தெரிவித்தார்.


அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், "ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையத்தால் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 325 பேர் தெரிவு செய்யப்படுகிறார்கள். மதுரை மற்றும் கோவை பயிற்சி மையங்களில் தலா 95 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற 216 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த உணவுக் கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து, ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்கி உள்ளது அரசு.


முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இதுவரை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 24 ஆயிரத்து 599 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 8,616 பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 4,329 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 19 ஆயிரத்து 472 பணியிடங்களும் நிரப்பப்பட்டிருக்கிறது.


கருணை அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வாயிலாக 2,730 பணியிடங்களும், பொதுச் சேவைத் துறைகளில் 4,568 பணியிடங்களும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வாயிலாக 2,673 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.


தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைமூலம் 16 ஆயிரத்து 780 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 1,352 பணியிடங்களும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1 மற்றும் 1 ஏ-ல் 72 பணியிடங்களும் உள்பட பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள மொத்தமாக 1 லட்சத்து 55 ஆயிரத்து 992 பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


பொதுப்பணிகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை மேற்கொள்ள ஒருங்கிணைந்த தனித்த வலைதளம் உருவாக்கப்பட உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் இளைஞர்களின் நலன் கருதி, கூடுதலாக சென்னை அண்ணா நகரில் நவீன வசதிகளுடன் ஒரு அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சம் தொடர்பாக பொதுமக்கள் தடையின்றி கட்டணமில்லா தொலைேபேசி மூலம் எளிதாக புகார் அளிக்க வசதியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு உதவி மையம் முதல்வரின் முகவரி துறையின்கீழ் ரூ.53.75 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது" இவ்வாறு அமைச்சர் கயல்விழி கூறினார்.

Comments

Popular posts from this blog