புதுச்சேரி வானொலியில் அறிவிப்பாளர், தொகுப்பாளர் பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை இதுதான்!
புதுச்சேரி வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக புதுச்சேரி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி பிரிவுத் தலைவர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
புதுச்சேரி வானொலி மற்றும் ரெயின்போ எப்.எம் அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, பகுதி நேர அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு வயது வரம்பு 2025 செப்டம்பர் முதல் தேதி உள்ளபடி 20 முதல் 50 வரையிலும், பகுதி நேர ஆர்.ஜே., பணிக்கு 20 வயது முதல் 40 வரையிலும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக படித்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்கள் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். நல்ல குரல் வளம், தெளிவான உச்சரிப்பு, ஒலிபரப்பில் ஆர்வமும், பொது அறிவுத்திறன் பெற்றவராகவும் இருத்தல் அவசியம்.
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, குரல் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்றடுக்கு தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிகள் அனைத்தும் தற்காலிகமானவை. இந்த பகுதி நேரப்பணிக்கு அதிகபட்சமாக மாதத்தில் 6 நாட்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூ. 354, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் ரூ. 266, இளைய பாரதம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் ரூ, 118 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை என்.இ.எப்.டி., அல்லது ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை அலுவலக நேரங்களில் வந்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, தபால் மூலமாகவோ வானொலி நிலைய அலுவலகத்திற்கு அனுப்பலாம். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment