பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்! அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்கள்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 100 ஆண்டுகளை கடந்த பள்ளிகளை தமிழக அரசு கொண்டாடி வருவதாக குறிப்பிட்டார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, முன்னாள் முதல்வர் கலைஞர் பயின்ற திருக்குவளை பள்ளியில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
பகுதிநேர ஆசிரியர்கள்
13 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்த கேள்விக்கு, இது தொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்பே தலைமை செயலாளர் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் என்பது பெயரளவில் தான், அவர்கள் முழுநேரமாக பணியாற்றி வருகிறார்கள். ஓவிய ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் எனப் பல பிரிவுகளில் உள்ள அவர்களை எப்படி எல்லாம் அரசுப் பணியில் எடுத்து கொள்ளலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டன.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை மற்றும் அமைச்சர் பெருமக்கள் மாவட்டங்களில் முகாமிட்டிருந்ததன் காரணமாக அடுத்தகட்ட கூட்டம் சற்று தள்ளிப்போனது. மிக விரைவாக அடுத்தகட்ட கூட்டம் நடத்தப்பட்டு, எந்தெந்த வகைகளில் அவர்களைப் பணி நிரந்தரம் செய்யலாம் என்பது குறித்து மிக விரைவில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும்.
ஆர்.டி.இ கல்வி உரிமைச் சட்டம் மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் சில தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது என்ற கேள்விக்கு, RTE மூலம் சுமார் 72,000 பிள்ளைகளை நாம் பள்ளிகளில் சேர்த்துள்ளோம். அவ்வாறு கட்டணம் வசூலித்த பள்ளிகள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்தப் பணத்தை பெற்றோர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம்.
இந்த குழப்பத்திற்கு முக்கிய காரணம் மத்திய அரசுதான். மாநில அரசு முதலில் பணத்தை செலுத்திவிடும், பின்னர் மத்திய அரசு அந்த நிதியை மாநில அரசுக்கு திருப்பி தரும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து போட்டால் தான் பணம் தருவோம் என்று கூறி, மத்திய அரசு தரவேண்டிய நிதியை ஒட்டுமொத்தமாக நிறுத்தி வைத்துள்ளது. அதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சனை இது. இருப்பினும், 71,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் சேர்க்கையை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

Comments
Post a Comment