14 September 2025

 டெட் தேர்வு; விரைவில் மறுசீராய்வு மனு - அமைச்சர் அன்பில் மகேஷ்





ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று விரைவில் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய சொல்லியிருக்கிறார். இது குறித்து சட்ட்ஆலோசனை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.


நம்முடைய வரிப்பணத்தை தான் ஒன்றிய அரசிடம் கேட்கிறோம். பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கடந்த இரு வருடங்களாக சில கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். 


இதனால் குழந்தைகள், ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே வேலையில் சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறது. மத்திய கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து, கல்வி தொகையினை கேட்டும் இதுவரை கொடுக்காமல் வஞ்சித்து வருகின்றனர்,' என தெரிவித்தார்.


த.வெ.க தலைவர் விஜய் திருச்சியில் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, 'இதுவரை தொலைக்காட்சி பார்க்கவில்லை. கூட்டம் என்பது அதிக அளவில் வந்திருக்கும் என சொன்னார்கள். அதை பார்த்துவிட்டு எனது கருத்தை சொல்கிறேன்.


 கூட்டம் என்பது வேடிக்கை பார்க்க வருகிறார்கள், அந்த தம்பிகள் வீட்டில் அரசின் பயனாளிகள் இருப்பார்கள். தமிழ் புதல்வன் மூலமாகவோ, மகளிர் உதவி தொகை மூலமாகவோ, காலை உணவு திட்டம் மூலமாக அவர்கள் குடும்பத்தினர் பயனடைந்து இருப்பார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதை இந்த திராவிட மாடல் அரசு செய்து கொண்டிருக்கிறது, என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

12 September 2025

 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 



மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரிய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இடைநிலை ஆசிரியர்கள் டெட் தாள்-1,பட்டதாரி (பி.எட் முடித்தவர்கள்) ஆசிரியர்கள் டெட் தாள்-2. எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.இதனையடுத்து, 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றது.


இந்தாண்டு மொத்தம் 4,80,000 பேர் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.தமிழ்நாட்டில் 2012 முதல் இதுவரை 6 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டது.2013, 2014-ல் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 6.65 லட்சம் - 7 லட்சம் வரை சென்றது.


அதன் பிறகு நடந்த 4 தேர்வுகளில் விண்ணப்பங்கள் 4 லட்சத்தை எட்டவில்லை.ஆனால், இந்த ஆண்டு மீண்டும் சாதனை அளவுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.


சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவின் படி, ஏற்கனவே பணியில் இருந்தும் டெட் தேர்வு எழுதாத ஆசிரியர்களும் கட்டாயமாக இந்த தேர்வை எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டது.இதனால், அந்த ஆசிரியர்களும் இந்த முறை விண்ணப்பித்ததால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.வரும் நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் டெட் தேர்வு நடைபெற உள்ளது.

11 September 2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.





 ஆசிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர்; தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு



TET தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


ஆசிரியர் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று அண்மையில் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதேபோல ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்றும் இல்லையெனில் டெட் தேர்வில் 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.


வேலையை விட்டு வெளியேறலாம்


ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதேபோல சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை டெட் தேர்வு பாதிக்குமா? என்று விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் சார்பில் அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது.

9 September 2025

 ஆசிரியா் தகுதித் தோ்வு: பணிபுரியும் ஆசிரியா்கள் குழப்பம்





திங்கள்கிழமையுடன் முடிவடைந்த ஆசிரியா் தகுதித் தோ்வு விண்ணப்பம் தொடா்பாக ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியா்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில், ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1 மற்றும் 2 வரும் நவம்பா் மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் எனவும், இதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்க திங்கள்கிழமை (செப். 8) கடைசி நாள் எனவும் ஆசிரியா் தோ்வு வாரியம் ஆக. 14ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால், பெரும்பாலானோா் கடைசி நாளான திங்கள்கிழமை விண்ணப்பிக்க இணைய தள மையங்களில் குவிந்தனா்.


இதனிடையே, 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியா்கள் தொடா்ந்து பணியாற்ற டெட் தோ்வில் தகுதி பெற வேண்டும் என்றும், தோ்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதிச் சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் செப். 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.


இதையடுத்து, ஏற்கெனவே பணியாற்றும் ஆசிரியா்கள் தாங்களும் இந்தத் தோ்வில் விண்ணப்பிக்க வேண்டும் என எண்ணி விண்ணப்பிக்கத் தொடங்கினா். இதனால், மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்ய அவகாசம் இருந்தும் மதியம் 12.30 மணிக்கே இணையதளம் முடங்கியது.


இதனால், தகுதியான பலா் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாயினா். இணையதள முடக்கத்தால் விண்ணப்பிக்கும் தேதியை செப். 10 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஆசிரியா் தோ்வு வாரியம்.


பணிபுரியும் ஆசிரியா்கள் குழப்பம்: ஆக. 14ஆம் தேதி வெளியிட்ட ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிப்பு, செப். 1ஆம் தேதி வெளியான உச்சநீதிமன்ற உத்தரவு ஆகியவற்றால் பல ஆசிரியா்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனா்.


இது தொடா்பாக, கல்வி அலுவலா் ஒருவா் கூறியதாவது: ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிப்பு புதிய விண்ணப்ப தாரா்களுக்கே பொருந்தும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியா் தோ்வு வாரியம் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, ஏற்கெனவே பணியாற்றும் ஆசிரியா்கள் இப்போது விண்ணப்பம் செய்யத் தேவையில்லை என்றாா்.

8 September 2025

 2 ஆண்டுகளில் 6 TET தேர்வுகள் நடத்த திட்டம்




ஆசிரியர் தகுதித் தேர்வில் ( TET ) தவறாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து.


 தமிழக அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 6 TET தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. 


இதுவரை 12 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே TET நடந்த நிலையில் , இனி ஆண்டுக்கு 3 முறை தேர்வு நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது . தற்போது தேர்ச்சி விகிதம் வெறும் 4.5 சதவீதமாக உள்ளது .

 மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்; செப்டம்பர் 20 அன்று ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்- KSTA 




திருவனந்தபுரம்: நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளுக்குள் TET தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய பகுதி ஆசிரியர்களை மோசமாக பாதிக்கும் என்று கேரள பள்ளி ஆசிரியர் சங்கம் (KSTA) தெரிவித்துள்ளது. 


கற்பித்தல் துறையில் சிக்கலான சிக்கல்கள் இருக்கும், இந்த சூழ்நிலையில், சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் இருந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு சட்டம் இயற்றத் தயாராக இருக்க வேண்டும் என்று KSTA கோரியது. 


இந்தக் கோரிக்கையை எழுப்ப இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, KSTA மாநிலத் தலைவர் D. சுதீஷ் மற்றும் பொதுச் செயலாளர் TKA ஷாஃபி ஆகியோர் செப்டம்பர் 20 அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி அலுவலகங்கள் முன்பும் KSTA தர்ணா நடத்தும் என்று ஒரு அறிக்கையில் அறிவித்தனர். 


புதிய தீர்ப்பின்படி, 5 ஆண்டுகளுக்கும் குறைவான சேவை உள்ளவர்கள் தங்கள் வேலைகளில் தொடரலாம், ஆனால் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள். மத்திய அரசு நிறைவேற்றிய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் மத்திய கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான TET, காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளுக்குள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அந்தச் சட்டம் கூறுகிறது. 2017 ஆம் ஆண்டு மோடி அரசு செய்த திருத்தத்தின் மூலம் அத்தகைய ஆசிரியர்கள் 2019 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் மேலும் தெளிவுபடுத்தப்பட்டது.


ஒரு தொழிலில் புதிய தகுதிகள் பரிந்துரைக்கப்படும்போது, ஏற்கனவே உள்ளவர்களுக்கு தளர்வுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், மத்திய அரசு பிறப்பித்த எந்த உத்தரவிலும் அத்தகைய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆசிரியர்களைப் பாதுகாக்க மாநில அரசு முடிந்த அனைத்தையும் செய்யும் என்ற கல்வி அமைச்சரின் அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.


 ஆசிரியர்களுக்கும், நாட்டின் கல்வித் துறைக்கும் தீங்கு விளைவிக்கும் சூழ்நிலை இருந்தபோதிலும் தொடர்ந்து அமைதியாக இருக்கும் மத்திய அதிகாரிகளின் நடவடிக்கை மர்மமானது என்றும் KSTA தெரிவித்துள்ளது.

  டெட் தேர்வு; விரைவில் மறுசீராய்வு மனு - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று விரைவில் நீதிமன்றத்...